Popular Posts

Monday 9 May 2016

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே !

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே !

தொடர் கட்டுரை மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே ! தொடர் - 01.....யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக மந்திரித்தல், அல்லது ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற விபரங்களை இத்தலைப்பில் எழுதுகின்றேன். மேற்கண்ட வேலைகள் செய்வதற்கு அறபு மொழியில் “ தல்ஸமாத் ” َطًْْلَََْسَمَاتْ எனப்படும். நான் இத்தலைப்பில் எழுதக் காரணம் வஹ்ஹாபிகளின் நடவடிக்கையே ஆகும். இவர்கள் மேற்கண்ட விடயங்கள் குப்ர், ஷிர்க், ஹராம் என்று தமது நூல்களில் எழுதியும், பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். தமது இக்கொள்கையை பொதுமக்களின் உள்ளத்தில் பதித்துவிட தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நோய், பேய், கண் திருஷ்டி நீங்குவதற்கு தாயத்து கட்டுதல், ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதுதல் போன்ற வழக்கம் முஸ்லிம்களிடமும், மற்ற மதத்தவர்களிடமும் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகும். இந்த வழக்கம் இன்று வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இருந்தே வருகின்றது. இவை ஷிர்க் – இணைவைத்தலான விடயமென்றும், பாவமான விடயமென்றும் கண்ணையும், கல்பையும் மூடிக் கொண்டு கூச்சலிடுகின்ற வஹ்ஹாபிகள் செறிந்து வாழும் ஸஊதி அறபிய்யஹ்வில் கூட சில நல்லடியார்கள் இன்றுவரை “ தல் ஸமாத் ” வேலை செய்து கொண்டிருப்பதும், அங்குள்ள முப்திகளும் இதைக்கண்டும் காணாதவர்கள் போல் இருப்பதும் விந்தையான விடயமேயாகும். கண்திருஷ்டி கண்திருஷ்டி அல்லது கண்ணூறு என்பது உண்மையான விடயமேயாகும். இதற்கு திருக்குர்ஆனிலும். திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். அல்குர்ஆனின் வசனம் நபீ யஃகூப் (அலை) அவர்களுக்கு பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே அழகுமிக்கவர்கள். கடைசி மகன் நபீ யூஸுப் (அலை) அவர்கள் ஏனைய சகோதரர்களைவிட மிக அழகானவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் செல்லும் போது பார்ப்பவர்கள் வியந்து விடுவார்கள். ஒருநாள் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தமது பன்னிரண்டு மக்களிடமும் பின்வருமாறு கூறினார்கள். َوَقَالَ يَابَنِيَّ لََا تَدْ خُلُوْا مِنْ بَابٍ واحِدٍ وادْ خُلُوا مِنْ أبْوَابٍ مُتَََفَرِّ قََةٍ “ நீங்கள் அனைவரும் ஒரே வாயலால் நுழையாமல் பல வாயல்களால் நுழையுங்கள். ( அல்குர்ஆன் ) ஆரம்ப காலத்தில் “ மிஸ்ர் ” நாட்டில் நுழைவதற்கு நான்கு வாயல்கள் அல்லது வழிகள் இருந்தன. நபீ யஃகூப் (அலை) அவர்களின் மக்கள் மிஸ்ர் நாட்டுக்குச் சென்ற சமயம் மேற்கண்டவாறு நபீ யஃகூப் (அலை) அவர்கள் உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். தந்தை யஃகூப் (அலை) அவர்கள் இவ்வாறு சொல்லக் காரணம், கண்திருஷ்டி, உண்மையான விடயமாயிருப்பதால் தமது பிள்ளைகளுக்கு அது ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயந்ததேயாகும். இவ்வாறு மேற்கண்ட வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இமாம் முஜாஹித், இமாம் கதாதஹ் போன்ற ஏனைய விரிவுரையாளர்களும் கூறியுள்ளார்கள். கண்திருஷ்டி உண்டு, அது உண்மை என்பதற்கும், அது ஏற்படும் வழியை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கும், மேற்கண்ட மறை வசனம் மறுக்க முடியாத ஆதாரமாகும். கண்திருஷ்டி உண்டு என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்களிற் சிலதை இங்கு தருகின்றேன். ஆதாரம் – 01 ஸஹ்ல் இப்னு ஹனீப் எனும் ஸஹாபி மிக அழகானவர்கள். ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த சமயம் ஆமிர் இப்னு றபீஆஹ் என்ற ஸஹாபீ அவரின் உடலைக்கண்டு வியந்து இது என்னே உடல் என்று கூறினார். அக்கணமே குளித்துக் கொண்டிருந்த ஸஹாபீ மயங்கிக் கீழே விழுந்தார். நபீ (ஸல்) அவர்களிடம் இச்செய்தி சொல்லப்பட்ட பொழுது நபீ (ஸல்) அவர்கள் அவரின் விடயத்தில் யாரைச் சந்தேகிக்கின்றீர்கள். என்று சொன்னவர்களிடம் கேட்டார்கள். ஆமிர் இப்னு றபீஆஹ்வைச் சந்தேகிக்கின்றோம் என்று கூறினார்கள். நபீ (ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து சற்றுக் கோபப்பட்டவர்களாக உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்வதேன் ? என்று கேட்டுவிட்டு அவருக்காக நீ குளிக்க வேண்டும் என்று அவரைப் பணித்தார்கள். அவர் ஒரு பாத்திரத்தில் தனது முகம், கை, முழங்கால், கால் ஓரம், காலின் உட்பகுதி போன்றவற்றைக் கழுவிக் கொடுத்தார். அந்த நீர் மயக்கத்தில் இருந்த ஸஹாபியின் மீது தெளிக்கப்பட்டது. அவர் மயக்கம் நீங்கி எழுந்து சென்றார். (ஆதாரம் – ஷர்ஹுஸ் ஸுன்னத் முவத்தா – மிஷ்காத்) ஆதாரம் – 02 கண்ணூறுக்காக மந்திரிக்குமாறு நபீ (ஸல்) அவர்கள் பணித்தார்கள். (ஆதாரம் – புஹாரி) ஆதாரம் – 03 உம்மு ஸல்மஹ் (றழி) அவர்களின் வீட்டில் நபீ (ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணைக் கண்டார்கள். அவளின் முகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டது. நபீ (ஸல்) அவர்கள் இவளுக்கு கண்திருஷ்டி உண்டு. ஆகையால் இவளுக்கு மந்திரம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம் – மிஷ்காத்) ஆதாரம் – 04 கண்திருஷ்டிக்காகவும்,விஷக்கடிக்காகவும், பொக்களிப்பானுக்காகவும் மந்திரிக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) ஆதாரம் – 05 நபீ (ஸல்) அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின் போது “ முஅவ்விததைன் ” எனப்படும் குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின்னாஸ் என்ற இரு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்வதைத் தடை செய்தார்கள். அம்றுப்னு ஹம்ஸ் என்பவரின் சந்ததிகள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றஸுலே ! எங்களிடம் ஒரு மந்திரம் இருந்தது. தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் நாங்கள் அது கொண்டு மந்திரிப்போம். எனினும் நாயகமே ! மந்திரிக்க வேண்டாம் என்று நீங்கள் தடை செய்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்வது ? என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் நீங்கள் சொல்லும் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டினார்கள். அதைக் கேட்ட நபீ (ஸல்) அவர்கள் அதில் குற்றமில்லை என்று கூறிவிட்டு உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் என்று கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) ஆதாரம் – 06 இஸ்லாத்துக்கு முன் “ அய்யாமுல் ஜாஹிலிய்யஹ் ” காலத்தில் நாங்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தோம். அது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன நாயகமே என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் உங்களின் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டியவுடன் சரி நீங்கள் செய்யலாம் என்று கூறிய நபீ (ஸல்) அவர்கள் மந்திரத்தில் “ ஷிர்க் ” ஆன விடயம் ஒன்றும் இல்லா விட்டால் மந்திரம் சொல்வதில் குற்றமில்லை என்று சொன்னார்கள். ஆதாரம் – 07 உங்களில் யாராவது நித்திரையில் பயந்தால், أََََعُوْذُُُ ُ ِبِكَلِمَاتِ اللهِ التََّامََّاتِّ مِنْ غَضَبِِهِِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشََّيَاطِيْنِ وَعَنْ يَحْضُرُوْنَ என்று ஓதிக் கொண்டால் அவருக்கு எத்தீங்கும் ஏற்படமாட்டாதென்று நபீ (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (ஆதாரம் – அபூ தாஊத்) இந்த துஆவின் பொருள் ;- “ அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷெய்தான்களின் ஊசலாட்டத்தையும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் சம்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் ” என்பதாகும். ஆதாரம் – 08 அப்துல்லாஹ் இப்னு அம்று (றழி) அவர்கள் தங்களின் சிறிய மக்களுக்கும், பெரிய மக்களுக்கும் இந்த துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அதை ஒரு தோலில் எழுதி தங்களின் கழுத்திலும் கட்டிக் கொண்டார்கள். (ஆதாரம் – துர்முதீ – நஸயீ) ஆதாரம் - 09 தாயத் கட்டுதல் “ஷிர்க்” இணைவைத்தலாகும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாயத் கட்டுதல் மட்டும் “ஷிர்க்” ஆகிவிடாது. தாயத் ஆகுமான வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகும். “ஷிர்க்” ஆன வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகாது. (ஆதாரம் – முக்னீ – இஆனஹ்) ஆதாரம் - 10 நபீ (ஸல்) அவர்கள் தங்களின் பேரர்களான ஹஸன், ஹுஸைன் (றழி) இருவருக்கும், أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَا مَّةٍُ என்று ஓதி அவ்விருவரிலும் ஊதிவிட்டு உங்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலுக்கு ஊதினார்கள் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் – புஹாரி) இந்த துஆவின் பொருள் ;- “கண்திருஷ்டியையும், ஆந்தை பக்கிளுடைய தீமைகளையும், ஷெய்த்தானுடைய தீமையையும் விட்டும் அல்லாஹ்வின் சம்பூரண வார்த்தைகள் கொண்டு நான் காவல் தேடுகின்றேன்.” என்பதாகும். ஆதாரம் - 11 உங்களின் பிள்ளைகளுக்கு “ அஸ்ஹாபுல் கஹ்ப் ” குகைவாசிகளின் பெயர்களைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அவர்களின் பெயர்கள் ஒரு வீட்டின் வாயலில் எழுதப்பட்டால் அந்த வீடு தீயினால் பாதிக்கப்படாது. ஒரு பொருளில் எழுதினால் அது திருடப்படமாட்டாது. ஒரு வாகனத்தில் எழுதினால் அது விபத்துக்குள்ளாகாது. என்று ஞான மகான்கள் கூறியிருப்பதாக அஷ்ஷெய்கு அஹ்மத் ஸாவீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ) ஆதாரம் – 12 குகைவாசிகளின் பெயர்கள் ஒன்பது விடயங்களுக்கு பிரயோசனம் செய்யுமென்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள். காணாமல் போன பொருளைக் கண்டு பிடிக்க, விரோதிகள் விரண்டோட, தீயணைக்க, (அதாவது ஒரு துணியில்அப்பெயர்களை எழுதி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எறிந்தால் நெருப்பு அணைந்து விடும்.), சிறுபிள்ளைகளின் அழுகையை நிறுத்த, மூன்றாம் முறைக் காய்ச்சலை நிறுத்த, தலையிடியைப் போக்க இம் மூன்று விடயங்களுக்கும் அப்பெயர்களை ஒரு தாளில் எழுதி வலது கையில் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடலிலும் கரையிலும் பிரயாணம் செய்பவர்களுக்கு, சொத்துக்களைப் பாதுகாக்க, புத்தி வளர்ச்சிக்கு (மூளை வளர்ச்சிக்கு) மேற்கண்ட ஒன்பது விடயங்களுக்கும் குகைவாசிகளின் பெயர்கள் பயன்படும். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ)இதுவரை நான் எழுதிக் காட்டியுள்ள ஆதாரங்களுக்கும் கண்திருஷ்டி உண்டு என்பதையும் அதற்காக மந்திரிக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றன.

No comments:

Post a Comment