Popular Posts

Monday 9 May 2016

"மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா"🌾

🌾"மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா?
அதனை அவரால் கேட்க முடியுமா"🌾

💠 பதில் : நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கூறியுள்ளான்.

1⃣ ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது'என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(நூல்: புகாரி)

2⃣ இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து
உனது நாயன் யார்?
உனது நபி யார்?
உனது சகோதரர்கள் யார்?
உனது கிப்லா எது?
உனது இமாம் யார்?
என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ்,
எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,
எனது சகோதரர்கள் முஸ்லிம்கள்,
எனது கிப்லா கஃபா,
எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார்.
(நூல் தப்றானி)

3⃣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.
(​முஸ்லிம், மிஷ்காத் - 149)

4⃣ ஸஹதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்."ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.​
(அஹ்மத், மிஷ்காத்)
--------------------------
--------------------------
💠 தல்கீன் பற்றிய இமாம்களின் கருத்துகள்,,,,,

தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவனின் தலைப்பக்கமாக நிற்பதும், மூன்று முறை ஓதுவதும் ஸுன்னத் ஆகும்.
வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்றுகூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும்,
அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது ஸுன்னத் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.

1⃣ தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2⃣ இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள்.
எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும்
(ஆதாரம்: றூஹ் பக்கம் 20)


3⃣ இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள்
புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும்.
(ஆதாரம்: துஹ்பா, பாகம் 3, பக்கம் 207)

4⃣ இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா?
தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு
சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும்.
(ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38)

5⃣ ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது.
அதனால், ஷாபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்றும்
தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும்.
இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152)

♦ வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர்.
மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும்.
(ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571)

♦ தல்கீன் ஓதாதவரும் ஓதமறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும்.
இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள்

💠 எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். எனவே தல்கீன் ஓதுதல், ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வாதிகளிடமும், திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் “ஸுன்னத்” ஆன விடயமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விடயமென்று சொன்னது கிடையாது.

1 comment:

  1. “தல்கீன்” என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும். ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு ஜனாஸாவை விளித்து தல்கீன் என்ற பெயரில் மலக்குகள் கேட்கும் கேள்விக்கு பதிலை அதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும். அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும்.
    ‘உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு’ என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.
    ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
    இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்?

    ReplyDelete