Popular Posts

Wednesday 6 January 2016

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவை

மந்திரித்தல்.....தொடர் கட்டுரை மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் ..... மார்க்கத்தில் உள்ளவையே !
  وَقَالَ يَاَبِنيّ لاَ تَدْ خُلُوْا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْ خُلُوْا مِنْ أبْوَابٍ مُتَفَرِّقَةٍ

நபீ யஃகூப் அலை (அலை) அவர்கள் கண்திருஷ்டி உண்டு என்பதை அறிந்திருந்ததினால் தனது மக்களுக்கு மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள் என்பதும். அவர்கள் ஒரு நபீயாக இருப்பதால் பொய்யான அல்லது இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்றை நம்பியிருக்க மாட்டார்கள் என்பதும், கண்திருஷ்டி வழிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது கண்திருஷ்டிக்கு கவர்ச்சி முக்கியம். நபீயஃகூப் (அலை) அவர்களின் பிள்ளைகள் கவர்ச்சிக்குரியவர்களாக இருந்ததினால்தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

இவ்வடிப்படையில்தான் கவர்ச்சியான, பார்ப்பவனின் “நப்ஸ்” மனதுக்கு விருப்பமான உணவுப் பொருட்கள் மறைத்து வைக்கப் படுவதும் சாப்பிடும்போது மற்றவர்களுக்குத் தெரியாமல் சாப்பிடுவதுமாகும். குறிப்பாக பால் போன்ற வௌ்ளை நிற உணவுப் பொருட்கள் மிக விரைவில் கண்திருஷ்டி ஏற்படக் கூடியவைகளாகும்.

முதலாம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டி உண்மை என்றும், அதனால் மயக்கம் ஏற்படுமென்றும், மயக்கமல்லாத வேறு குறை ஏற்படுமென்றும், அதற்காக கண்திருஷ்டிக்குரியவனின் முகம், கை, கால் போன்ற உறுப்புக்களைக் கழுவி அந்த நீர் கொண்டு கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவன் மீது தெளிப்பதால் சுகம் கிடைக்கும் என்றும், உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொல்வதேன் என்ற நபீ (ஸல்) அவர்களின் கூற்றில் இருந்து கண்திருஷ்டியால் மரணம் கூட நிகழலாம் என்றும் விளங்க முடிகின்றது. கண்திருஷ்டியால் மரணம் கூட நிகழலாம் என்பதை நபீ (ஸல்) அவர்களின் இன்னுமொரு பொன்மொழி தெளிவாக கூறுகின்றது. அது பின்வருமாறு.

 اَلْعَيْنُ تُدْ خِلُ الرَّ جَُلَ الْقَبْرَ



  ( கண்திருஷ்டி ஒரு மனிதனை மண்ணறைக்கு அனுப்பிவிடும் ) இரண்டாம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டி உண்மை என்றும், அதற்காக மந்திரிக்குமாறு நபீ(ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள் என்றும் விளங்குகின்றது. நான்காம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டிக்காகவும், விஷக்கடிக்காகவும், பொக்களிப்பான் நோய்க்காகவும் மந்திரிக்கலாம் என்றும், மந்திரிப்பதன் மூலம் இவை சுகமாகும் என்றும் விளங்குகின்றது. ஐந்தாம் ஆதாரத்தில் இருந்து “ குல்அஊது பிறப்பில் பலக், குல்அஊது பிறப்பின்னாஸ் ” என்ற இரண்டு அத்தியாயங்களும் நோய் நிவாரணி என்றும், அவ்விரண்டையும் ஓதுவதுடன் மட்டும் நின்று விடாமல் ஓதியபின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வதில் பயன் உண்டு என்றும், மந்திரத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான சொற்கள் இல்லாவிட்டால் அந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம் என்றும், கண்திருஷ்டிக்கும் விஷக்கடிக்கும் மந்திரிப்பதை தொழிலாகக் கொள்ளலாம் என்றும் விளங்குகின்றது. ஆறாம் ஆதாரத்தில் இருந்தும் மேற்கண்ட கருத்துக்களே கிடைக்கின்றன.

ஏழாம் ஆதாரத்தில் கூறப்பட்ட “துஆ” ஒரு மந்திரம் என்றும், அது சகல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ஒரு கேடயம் போன்றதென்றும் விளங்குகின்றது. எட்டாம் ஆதாரத்தில் இருந்து இந்த “துஆ” வை பாதுகாப்பைக் கருதி சிறுவர்களும், பெரியவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதை தோல், தாள், தகடு போன்றவற்றில் எழுதி உடலின் எந்தப் பகுதியிலேனும் கட்டிக் கொள்ளலாம் என்றும் விளங்குகின்றது. ஒன்பதாம் ஆதாரத்தில் இருந்து தாயத் கட்டலாம் என்றும், ஆனால் அதில் “ ஷிர்க் ” இணையை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள் இருத்தலாகாதென்றும் விளங்குகின்றது. பத்தாம் ஆதாரத்தில் இருந்து நபீ (ஸல்) அவர்கள் கூட “ தல்ஸமாத்” வேலை செய்துள்ளார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஊதிப்பார்த்துள்ளார்கள் என்றும், நபீ இப்றாஹீம் (அலை) அவர்களும் இவ்வேலையைச் செய்துள்ளார்கள் என்றும், ஷெய்த்தான், ஆந்தை – (பக்கிள்) கண்திருஷ்டி இம்மூன்றினாலும் ஏற்படும் தீமைக்கு இதில் கூறப்பட்ட ஓதல் – மந்திரம் பயன் தரும் என்றும், ஆந்தையினாலும் மனிதனுக்கு துன்பம் ஏற்படும் என்றும் விளங்குகின்றது. பதினோராம் ஆதாரத்தில் இருந்து குகைவாசிகளின் திரு நாமங்களை குறித்த ஒன்பது விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும், அவற்றை எழுதி தாயத் கட்டலாம் என்றும் விளங்குகின்றது.

ஆதாரம் – 13 நபீ (ஸல்) அவர்களின் ஸஹாபாக்களில் முப்பது பேர்கள் கொண்ட ஒரு கூட்டம் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் அவர்களுக்கு ஓர் இடத்தில் தங்கிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அங்கு அறபுக் காபிர்களில் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். நபித் தோழர்கள் அவர்களிடம் உணவு தருமாறு கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். ஸஹாபாக்கள் பொறுமையுடன் திரும்பி விட்டனர். அதன்பிறகு அவ்வறபிகளின் தலைவனுக்கு பாம்பு அல்லது தேள் கடித்து விட்டது. அதனால் அவன் தலைக்கு விஷம் ஏறி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான். அவனைச் சுகப்படுத்துவதற்காகவும், அவனின் விஷத்தை இறக்கிவிடுவதற்காகவும் அவர்கள் கடும்பாடுபட்டனர். எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை. அவர்களில் ஒருவன், தற்போது இவ்விடத்தில் தங்கியிருக்கும் முஹம்மத் நபீயின் தோழர்களிடம் விஷமிறக்கும் மந்திரம் இருக்கலாம். அவர்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள் என்று ஓர் ஆலோசனை சொன்னான். அவனின் ஆலோசனைப்படி அவர்களிற் சிலர் ஸஹாபாக்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து எங்களின் தலைவருக்கு விஷஜந்து தீண்டி விட்டது. எங்களால் முடிந்தவரை மருந்துகள் செய்தும் பயன்கிடைக்கவில்லை.

உங்களிடம் மருந்து உண்டா ?

உங்களில் மந்திரிப்பவர்கள் இருக்கின்றார்களா ?

என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்களில் ஒருவரான அபூஸயீ்த் (றழீ) அவர்கள் ஆம் விஷக்கடிக்கு நான் மந்திரம் சொல்லி இறக்கிவிடுவேன். எனினும் நாங்கள் உங்களிடம் வந்து உணவு கேட்டபொழுது தர மறுத்து எங்களை விரட்டினீர்கள் இப்போது எங்களிடம் உதவி தேடி வந்துள்ளீர்கள். எனவே நான் உங்களின் தலைவனின் விஷம் இறக்குவதாயின் எனக்கு முப்பது ஆடுகள் தர வேண்டும் என்று கேட்டார். அவரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அவ்வறபிகள் அவரை அழைத்துச் சென்றனர். அவர் “ ஸூறதுல்பாதிஹா ”வை ஓதி விஷஜந்து கடித்த இடத்தில் துப்பினார். அக்கணமே தலைவனின் தலைக்கேறியிருந்த விஷம் இறங்கி விலங்கில் இருந்து விடுபட்டவன் போல உற்சாகத்துடன் எழுந்து சென்றான்.

                                                                                                                அவர்கள் ஒப்பந்தம் செய்தபடி முப்பது ஆடுகளையும் பெற்றுக் கொண்டு நபித்தோழர் தனது கூட்டத்திடம் வந்து சேர்ந்தார். வெறுங்கையுடன் சென்ற ஸஹாபீ முப்பது ஆடுகளுடன் வந்ததைக்கண்ட நபித்தோழர்கள் மகிழ்ச்சி நிறைந்த குரலில், “ இந்த ஆடுகளையெல்லாம் நமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம், என்று சொன்னார்கள். இது கேட்ட மந்திரம் சொன்ன ஸஹாபீ நீங்கள் சொல்வது போல் செய்வதில்லை. நாம் நபீ (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறுவோம். அவர்கள் சொல்வது போல் செய்து கொள்வோம் என்றார். அவரின் கூற்றை அனைவரும் சரி கண்டனர். பின்னர் அவர்கள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொன்ன ஸஹாபியை பார்த்து நீங்கள் செய்தது சரியே. எனினும் அது மந்திரமென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் ? என அவரிடம் வினவிவிட்டு நீங்கள் கொண்டு வந்திருக்கும் ஆடுகளில் எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்றார்கள். ( ஆதாரம் – புஹாரீ )

மேலே கண்ட நபீமொழி பல கருத்துக்களைத்தருகின்றது. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். “ றுக்யத் ” என்றால் மந்திரம் என்றும், “ றாகீ ” என்றால் மந்திரிப்பவன் என்றும் பொருள் வரும். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்லி விஷமிறக்கிய ஸஹாபீ ஸயீத் அவர்களைப் பார்த்து    

 وَمَا يُدْرِيْكََ أنَّهَا رقْيَةٌ

  அது – (ஸூறதுல் பாதிஹஹ் ) மந்திரமென்று உனக்கு எவ்வாறு தெரியும் ? என்று கேட்டதிலிருந்து ஸூறதுல்பாதிஹஹ்க்கு மந்திரமென்று சொல்லலாமென்று தெளிவாகிவிட்டது. மந்திரம் சொன்ன ஸஹாபீ தான் செய்த வேலைக்கு முப்பது ஆடுகள் கேட்டதிலிருந்து மந்திரம் சொல்வதற்கு தொகை குறிப்பிட்டுக்கூட கூலி பேசலாம் என்பதும் தெளிவாகி விட்டது. இந்த நபீமொழி விஷக்கடிக்கு ஊதிப்பார்க்கவும், துப்பவும் முடியுமென்றால் விஷக்கடியல்லாத வேறு நோய்க்கு ஏன் ஊதிப் பார்க்கக் கூடாது ? ஏன் துப்பக் கூடாது ? விஷக்கடியோ, காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி போன்ற நோயோ எதுவானாலும் அது மனிதனுக்கு வேதனையைத் தருகின்ற ஒன்றேயாகும். அதை நீக்கி வைப்பது ஆகுமென்பது மட்டுமன்றி அது ஒரு வணக்கமுமாகும். ஏனெனில் மேற்கண்ட ஐந்தாவது ஆதாரத்தில் உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மந்திரம் சொல்லி நோயுற்றிருப்பவர்களுக்கு உதவுவது “ நன்மை ” என்பது தெளிவாகின்றது. பாம்பு கடித்த அறபுத் தலைவனுக்கு ஸஹாபீ மந்திரம் சொல்லி விஷமிறக்கியதிலிருந்து முஸ்லிமுக்கு மட்டுமன்றிக் காபிரானவர்களுக்குக் கூட திருக்குர்ஆன் வசனங்கள் கொண்டு மந்திரிக்கலாம் என்பது தெளிவாகின்றது.

இன்னும் இந்த நபீமொழியில் இருந்து இன்னொருவருக்கு திருக்குர்ஆன் ஓதுவதற்கு தொகை குறிப்பிட்டுக் கூலி பேசலாம் என்பதும், தல்ஸமாத், மந்திரித்தல், ஊதிப்பார்த்தல், இஸ்ம் தாயத் கட்டுதல் போன்ற வேலைகளுக்கு கூலிபேசி எடுக்கலாம் என்பதும், சிறிய வேலைக்கு முப்பது ஆடுகளைக் கூலியாகப் பெற்றதிலிருந்து சிறிய “ தல்ஸமாத் ” வேலைக்குக் கூட கூடுதலான தொகை பேசலாம் என்பதும் தெளிவாகின்றது. நபீ (ஸல்) அவர்கள் மரண வருத்தத்தில் இருந்த பொழுது “ முஅவ்விததைன் எனும் குல்அஊது பிறப்பில்பலக், குல்அஊது பிறப்பின்னாஸ் என்ற இரண்டு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் உடலில் ஊதிக் கொண்டார்கள். அவர்களின் வருத்தம் கூடிய பொழுது அவ்விரு அத்தியாயங்களையும் நான் ஓதி அவர்களில் ஊதினேன். அவர்களின் திருக்கரத்தின் “ பறகத் ” அருளைப் பெறுவதற்காக அதைக் கொண்டு எனது உடலில் தடவிக் கொண்டேன். என்று ஆயிஷா (றழி) அறிவித்தார்கள். ( ஆதாரம் – புஹாரீ ) (அறிவிப்பு – ஆயிஷா (றழி) ) மேலே நான் எழுதிக் காட்டிய நபீமொழி ஒன்றில் “ ஸூறதுல் பாதிஹஹ் ” மந்திரமென்று சொல்லப்பட்டிருந்தது. இப்பொழுது மேலே கூறிய இந்த நபீமொழியில் குறித்த இரண்டு அத்தியாயங்களும் மந்திரம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நபீமொழியை புஹாரீ என்ற நூலில் பதிவு செய்த இமாம் புஹாரீ (றஹ்) அவர்கள் இந்த நபீமொழிக்கு

 بَابُ الرٌّقَى بِالْقُرْآنِ وَالْمُعَوِّذَتَيْن



 திருக்குர்ஆனைக் கொண்டும், குறித்த இரண்டு அத்தியாயங்கள் கொண்டும் மந்திரித்தல் என்னும் தலைப்பிட்டு இந்த நபீமொழியை எழுதியுள்ளார்கள். இதிலிருந்து இவ்விரு அத்தியாயங்கள் மட்டுமன்றித் திருக்குர்ஆனுக்கு மந்திரம் என்று சொல்ல முடியும் என்பதும் தெளிவாகின்றது. இதன்படி திருக்குர்ஆனின் எந்த வசனத்தைக் கொண்டும் மந்திரிக்க முடியும். நபீ (ஸல்) அவர்கள் இவ்விரு அத்தியாயங்களையும் ஓதியதுடன் மட்டும் நின்று விடாமல் கையில் ஊதி முகத்தில் தடவியதிலிருந்து ஊதுவதிலும், தடவுவதிலும் பயன் உண்டென்பது தெளிவாகின்றது. ஆயிஷா நாயகி (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் கை கொண்டு தனது உடலில் தடவியதிலிருந்து அவர்களின் கையிலும் அருள் உண்டு என்பதும், நபீ அல்லாதவராயினும் அருள் உள்ள ஒருவரின் கை கொண்டு தடவிக் கொள்ளலாம் என்பதும் தெளிவாகின்றது. இதுவரை நான் எழுதியுள்ள ஆதாரங்கள் மூலம் கண்திருஷ்டி உண்மை என்பதும், அதற்காக ஊதிப்பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்துக்கட்ட முடியும் என்பதும், முழுத்திருக்குர்ஆனைக் கொண்டும், குறிப்பாக விஷேடமான சில அத்தியாயங்கள் கொண்டும் மந்திரிக்க முடியும் என்பதும் தெளிவாகிவிட்டது. இவை ஆகுமான விடயம் என்பதற்கு இன்னும் பல பலமான ஆதாரங்களும், பகுத்தறிவு ரீதியான தத்துவங்களும்உள்ளன. “ தல்ஸமாத் ” வேலைக்கு எண்ணற்ற ஆதாரங்கள் திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் தெளிவாக இருக்கும் போது

வஹ்ஹாபிகள் இவை ஷிர்க் என்றும் ஹறாம் என்றும் கூச்சலிடுவது ஏனோ ?

இவர்கள் கொண்டாடும் இவர்களின் குருநாதர் இப்னுதைமிய்யஹ் என்பவர் கூட இந்த வேலை செய்துள்ளார் என்பது இவர்களுக்குத் தெரியாதா ?

அடுத்த தொடரில் இவரும் தாயத் வேலை செய்திருப்பது அம்பலத்துக்கு வரும். கண் திருஷ்டியின் தத்துவம் மனிதனின் கண்ணில் சில சுரப்பிகள் உள்ளன. அவை கண்ணுக்கு அல்லது மனதுக்கு விருப்பமான ஒன்றைக் காணும் போது மட்டுமே சுரக்கும். அந்நேரம் கண்களில் இருந்து வெளிப்படும் ஒருவகை நச்சுக்கதிர் காணப்படும் பொருளைத் தாக்குகின்றது. அப்பொருள் உணவாக இருந்தால் அதில் ஒருவகை மாற்றமும், அது மனிதன் போன்ற உயிருள்ளதாயிருந்தால் அதில் இன்னொரு வகை மாற்றமும் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது அது கண்திருஷ்டி எனப்படும். கண் சுரப்பியின் நச்சுக் கதிர் தாக்கிய பொருள் மனிதனாயிருந்தால் அவனில் காய்ச்சல், சோர்வு, மயக்கம், நடுக்கம், மனக்குழப்பம், நீங்காத சிந்தனை போன்ற பல்வேறு மாற்றங்களும் ஏற்படும். நபீமொழியின்படி மருந்தற்ற நோயான மரணமும் ஏற்பட்டுவிடும். கண்ணில் இருந்து பொருளை வந்தடையும் நச்சுக் கதிர் மனிதனின் கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் “ லதாபத் ” மிருதுவானது.

மருத்துவ விஞ்ஞானம் இன்னும் முன்னேறி வரும் பொழுது இக்கதிரைப் பார்க்கத்தக்க கண்ணாடியை கண்டு பிடிக்க முடியும். கண்ணில் இருந்து வரும் நச்சுக் கதிரின் செயற்பாடு மனிதனைப் பொறுத்தும், அவனல்லாத ஏனைய உயிரினங்களைப் பொறுத்தும் வித்தியாசப்படும். சில உயிரினத்தைப் பொறுத்தவரை அதன் நச்சுக்கதிர் தாக்கினால் அவன் உடனே மரணித்து விடுவான். இத்தன்மை ஒருவகை பாம்பிடமும் உண்டு. இன்னும் சில உயிரினங்களைப் பொறுத்தவரை அது தனது நச்சுக்கதிர் கொண்டு தனது முட்டையைப் பார்வையால் பொரித்து அதிலிருந்து குஞ்சுகளை வெளிப்படுத்தும். இத்தன்மை கடலாமையிடம் உண்டு.

நபீமார், இறைநேசர்களான அவ்லியாக்கள் போன்றோரின் கண்களில் உள்ள நச்சுக்கதிர் ஒரு மனிதனின் உடலைத் தாக்காமல் அவனின் உள்ளத்தில் பாய்ந்து அதைச் சீர்செய்துவிடும். ஒரு மனிதனுக்கு அறிவைக் கற்றுக் கொடுத்து அவனின் மனக்கண்ணைத் திறந்து வைத்தவர்களும் உள்ளனர். அவனின் கைபிடித்து அவனை அல்லாஹ்வின்பால் சேர்த்து வைத்தவர்களும் உள்ளனர். தமது பார்வை கொண்டு மட்டும் மெய்ஞ்ஞானப் பாதையைக் காட்டி மேஞ்சுவனம் சேர்த்து வைத்த மெய்யடியார்களும் உள்ளனர்

No comments:

Post a Comment