Popular Posts

Tuesday 12 January 2016

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்



“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்) திருக்குர்ஆன் 2 : 153



பொறுமையும், தொழுகையும் மனிதர்கள் செய்கின்ற அமல்களேயாகும். இத்திரு வசனத்தில் இவ்விரண்டைக் கொண்டும் “வஸீலா” உதவிதேடுமாறு அல்லாஹ் விசுவாசிகளைப் பணித்துள்ளான்.



பொறுமை, தொழுகை இரண்டு வகையான வணக்கங்கள் மட்டும் இத்திரு வசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் “இபாதத்” வணக்கம் அல்லது அமல்கள் என்ற அடிப்படையில் இவ்விரண்டும் தான் வணக்கங்கள் என்றோ அமல்கள் என்றோ சொல்லமுடியாது.



நோன்பு, ஸகாத், ஹஜ்ஜூ, திக்று, பிக்று, முறாக்கபா, முஷாஹதா போன்ற எல்லா நற்கிரியைகளும் மார்க்கத்தில் நல்லமலாக கணிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கொண்டு நாம் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும். மேலும் பொறுமையும், தொழுகையும் சிருஷ்டிகள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும்.



எனவே மேற்கூறிய திருவசனத்தில் நல்லமல்களைக் கொண்டும், சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடுவதற்கு மறுக்கமுடியாத ஆதாரமும் இருக்கின்றது.



வஹ்ஹாபிஸத்தை நாடெங்கும் பரப்பிய நல்லவர்கள் இத்திருவசனம் தருகின்ற வெளிப்படையான அர்த்தத்தையும், அது உள்ளடக்கி நிற்கின்ற விளக்கத்தையும் உணராமல்தான் வஸீலாத் தேடுவது கூடாதென்றும், அவ்வாறு கேட்பது “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.



நபிமொழி . 08



உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர்கள் ஒரு பிரயாணம் செய்தார்கள். அப்பிரயாணத்தின் போது இருட்டாகிவிட்டது. இரவைக் கழிப்பதற்காக வழியில் இருந்த மலைக்குகையொன்றில் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே போனபின் மலையுச்சியிலிருந்து விழுந்த கல் ஒன்று அவர்கள் தங்கியிருந்த குகையின் வாயலை அடைந்து விட்டது.



அக்கல் பெரிய கல்லாக இருந்த படியால் அவர்களால் அதை அகற்ற முடியாமல் போயிற்று. அதை அகற்றாமல் அவர்கள் வெளியேற வேறுவழியும் இல்லாமலிருந்தது. குகைக்குள் மாட்டிக் கொண்ட மூவரும் சற்று நேரம் செய்வதறியாது யோசித்துக் கொண்டும், கவலையடைந்து கொண்டுமிருந்தனர்.



அவர்களிலொருவர் மற்ற இருவரிடம் நாம் இதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. இதற்து என்ன வழிசெய்யலாமென்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர் நாம் இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. எனினும் நாம் நமது வாழ்க்கையில் செய்த அமல்களில் தூய்மையான அமல்களும் இருக்கும் அந்த வணக்கத்தைக் கொண்டு நாம் இப்பொழுது வஸீலாத் தேடிப்பார்ப்போம் என்று ஆலோசனை சொன்னார்.



அவர் கூறிய ஆலோசனையை மற்ற இருவரும் சரி கண்டதால் அவ்வாறே செய்வதென்று முடிவு செய்தார்கள்.



மூவரில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த நோயால் பீடிக்கப்பட்ட பெற்றோர் இருந்தார்கள். நான் காலையில் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வரும் பொழுது எனது பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் இராச்சாப்பாட்டுக்காக பால் கொண்டு வருவேன். முதலில் எனது பெற்றோர்களுக்கே அதைக் கொடுப்பேன். அவர்கள் அருந்தி மிஞ்சுகின்ற பாலையே எனது மனைவி மக்களுக்கு கொடுப்பேன். பெற்றோரின் பசிதீராமல் எனது மனைவி மக்களுக்கு நான் கொடுத்ததேயில்லை.



ஒரு நாள் எனது தேவை காரணமாக காட்டில் நான் தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிதுநேரம் கழித்து நான் வந்தபொழுது எனது பெற்றோர்கள் என்னை எதிர்பார்த்திருந்து விட்டு உறங்கிவிட்டார்கள். அவர்களை விழிப்பாக்கி அவர்களின் தூக்கத்தை கலைக்க விரும்பாத நான் விடியும்வரை பால் பாத்திரத்தை ஏந்தியவனாக நின்றுகொண்டிருந்தேன். எனது குழந்தைகளோ பசிக்கொடுமையினால் பால் கேட்டு எனது காலடியில் தவழ்ந்து திரிந்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு கொடுக்காமல் விடியும்வரை காத்திருந்து விடிந்த பிறகு எனது பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுத்தான் எனது பிள்ளைகளுக்குக்கொடுத்தேன்.



இறைவா! நான் இவ்வேலையை எனது பெற்றோர் மீது எனக்கிருந்த பாசத்தினாலும், அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டிய காரணத்தினாலுமேயன்றி யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நான் அங்கணம் செய்யவில்லை.



எனவே, நான் செய்த இவ்வேலை உன்னிடத்தில் தூய்மையானதாகவும், “இக்லாஸ்” கலப்பற்றதாயுமிருந்தால் இக்கல்லினால் எங்களுக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கிவைப்பாயாக என்று வேண்டினார்.



அப்பொழுது அக்கல் சற்று நகர்ந்தது. எனினும் அதன் வழியாக வெளியேற முடியாமலிருந்தது.



இரண்டாம் நபர்“இறைவா! எனது சாச்சாவுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் எனக்கு மிக விருப்பமுள்ளவள். அவளுடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினேன். ஆயினும் அவள் அதற்கு இணங்கவில்லை. இவ்வாறு ஒரு வருடம் ஓடியது.



ஒரு நாள் அவள் என்னிடம் வந்த பொழுது உடலுறவுக்குச் சம்மதிக்கும் நிபந்தனையுடன் 120 தீனார் அவளுக்குக் கொடுத்தேன். அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாரான பொழுது அவள் என்னை நோக்கி நான் உனக்கு ஹறாமாக்கப்பட்டவள். என்னுடன் உடலுறவு கொள்ளாதே என்று சொன்னாள்.



உடனே நான் அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளிடம் கொடுத்த 120 தீனார்களையும் அவளிடம் இருந்து பெறவுமில்லை. “இறைவா! எனது இவ்வேலை உன்னிடத்தில் புனிமானதாகவும், “இக்லாஸ்” கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தினை நீக்கி வைப்பாயாக” என்று வேண்டினார்.



அந்தக்கல் மீண்டும் சற்று நகர்ந்தது. எனினும் அவ்வழியால் வெளியேறமுடியாமல் இருந்தது.



மூன்றாமவர் “இறைவா! கூலிக்கு வேலை செய்பவர்கள் எனக்குத் தேவைப்பட்டனர். பல கூலியாட்களைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு அவர்களுக்குரிய கூலிகளையும் கொடுத்து விட்டேன்.



எனினும் அவர்களில் ஒரு கூலியாள் தனது கூலியை வாங்காமல் என்னிடம் விட்டுச் சென்று விட்டார். நான் அதை சும்மாபோட்டு வைக்காமல் எனது மூலதனமான ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்றவற்றுடன் அதையும் சேர்த்துப் பெருக்கினேன். அவருடைய கூலி வியக்கத்தக்க அளவுக்கு பெருகிவிட்டது.



ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் விட்டுச் சென்ற கூலியை தருமாறு கேட்டார். இதோ நீகாணும் ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்ற எல்லாமே உண்ணுடையதுதான் எடுத்துச் செல் என்றேன்.



அதற்கவர் என்னை கிண்டல் செய்யாதே என்றார். நான் கிண்டல் செய்ய வில்லை. நான் சொல்வது உண்மைதான் என்று சொன்னேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் எடுத்துச் சென்றார். இறைவா! என்னுடைய இந்த வேலை உன்னிடத்தில் புனிதமானதாயும் “இக்லாஸ்”கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கி வைப்பாயாக என்று வேண்டினார். அக்கல் முழுமையாக அகன்று மூவரும் வெளியேறினார்கள். என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



ஆதாரம் :புஹாரி அறிவிப்பு :அப்துல்லாஹ்பின்உமர் (றழி

No comments:

Post a Comment