Popular Posts

Wednesday 6 July 2016

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர்.

பலரும் ஒரே வார்த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர்.

சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும்.

தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.
(புஹாரி: 4418)

எனவே, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாகும்.

பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கமும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.

முஹம்மத் இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
’நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு ‘தகப்பல்லாஹு மின்னா வமின்கும்’ என்று  கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ஜையி’ நல்லது என இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறுவதில் பிரச்சினையில்லை என இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இப்படி வாழ்த்துக் கூறுதல் பற்றிக் கேட்ட போது நான் அதை அறியவும் மாட்டேன், அதை மறுக்கவும் மாட்டேன் என்று பதில் கூறினார்கள். இது குறித்து இப்னு ஹபீப் அல் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளக்கம் கூறும் போது நான் அறியமாட்டேன் என்றால் அது ஸுன்னா என அறியவில்லை. அதைச் சொல் பவரை நான் எதிர்க்கவும் மாட்டேன். ஏனென்றால், அது ஒரு நல்லவார்த்தை. அத்துடன் அது துஆவாகவும் அமைந்துள்ளது என்பதனாலாகும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெருநாள் தினத்தில் ‘ஈத் முபாரக்’ என்ற வாழ்த்துக் கூறலாம். வாழ்த்துக் கூறும் போது இந்த வார்த்தையைத்தான் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வதில் தப்பும் இல்லை. மக்கள் இந்த வார்த்தையைக் கூறித்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது பித்அத்தாகும் என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

No comments:

Post a Comment