றஸூல்மார் திலகம் முஹம்மது (ஸல்) அவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃளம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்கள்! தொடர் -- 01 வலீ என்றால் யார்? “வலீ” என்றால் அதிகாரி என்று பொருளாகும். இதன் பன்மைச் சொல் “அவ்லியாஉ” (அதிகாரிகள்) என்பதாகும். இதன்படி ‘வலியுல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் அதிகாரி என்றும் “அவ்லியாஉல்லாஹ்” என்றால் அல்லாஹ்வின் அதிகாரிகள் என்றும் பொருள் வரும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதாயின் அப்பெண்ணின் தந்தை / சிறிய – மூத்த தந்தையர் / சகோதரன் வலீகாரன் ஆகின்றான். இவனே அப்பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாகின்றான். வலீ என்பவரின் அதிகாரம் எது? இதன்படி “வலியுல்லாஹ்” அல்லாஹ்வின் அதிகாரி என்பவர் எதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர் என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு விடை சொல்வதாயின் அவர்களைப் பற்றி “வலீ” அதிகாரி “அவ்லியா” அதிகாரிகள் என்று இறைவன் பொதுவாகவே சொல்லியுள்ளதால் அனைத்து விடயங்களுக்கும் இறைவனின் அதிகாரிகளாகவே அவர்கள் திகழ்கிறார்கள். மாறாக குறித்த ஒரு சில விடயங்களுக்கு மட்டும் அவர்கள் அதிகாரிகளல்லர். அவர்கள் எதையும் ஆக்கவும், அழிக்கவும், கொடுக்கவும், எடுக்கவும் அடியார்கள் கேட்கும் தேவைகளை இறைவனிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்கள் மொத்தமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார்கள். எதைச் செய்வதற்கும் அவர்களுக்கு பயமோ – கவலையோ ஏற்படுவதில்லை. கறாமத் றஸூல்மார், நபீமார்களுக்கு வல்ல அல்லாஹ் “முஃஜிஸத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான் அதைக் கொண்டு அவர்கள் “ரிஸாலத், நுபுவ்வத்” என்பவற்றை நிலைநிறுத்தினார்கள். அதேபோல் வலீமார்களுக்கு இறைவன் “கறாமத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான். அதைக் கொண்டு அவர்கள் “விலாயத்” என்பதை உலகில் நிறுவினார்கள். நபீமார், றஸூல்மாரிலிருந்து அற்புதம் வெளியாகும்போது அதை “முஃஜிஸத்” என்றும் வலீமார்களிலிருந்து வெளியாகும் போது அதை “கறாமத்” என்று அழைக்கப்படுகிறது. இரண்டின் மூலமாக வெளியாகும் செயல்கள் ஒன்றுதான். ஆயினும் நபீமார், வலீமார் என்று பிரித்துக் காட்டுவதற்காக முஃஜிஸத், கறாமத் என்று சொல்லப்பட்டுள்ளது. வலீமார் பல பிரிவினர் “அவ்லியாஉல்லாஹ்” அனைவரும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசர்களாயினும் அவர்களில் பல பிரிவினர் உள்ளனர். நுகபாஉ, நுஜபாஉ, புதலாஉ, அக்யார், உறபாஉ, அன்வார், அவ்தாத், முக்தாறூன், கௌது, குத்பு என்று பல பிரிவினராக வலீமார்கள் அழைக்கப்படுகின்றனர். கௌது / குத்பு உலகில் தினமும் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் வலீமார்கள் இருந்து கொண்டேயிருப்பர். அவர்கள் அனைவருக்கும் தலைவராக “குத்பு” என்ற அதிபர் இருந்து கொண்டேயிருப்பார். அவருக்கே “கௌது” என்றும் சொல்லப்படும். அவர் உலகைப் பிரிந்தால் அவரின் இடத்துக்கு இன்னொருவர் நியமிக்கப்படுவார். “குத்பு” என்பவர் காப் மலை போன்றவர். காப் மலை என்பதே உலக மலைகளில் மிகப் பெரிதாகக் கணிக்கப்படுகிறது. அந்த மலையிலிருந்தே ஏனைய மலைகளை நோக்க முடியும். அந்த மலைக்கு நபிமார்களும், அவ்லியாக்களும் சென்று வந்துள்ளனர். “காப்” என்ற மலையிலிருந்துதான் ஏனைய மலைகளுக்குத் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது. மலைகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் அது காப் மலையிலிருந்தே ஏற்படுகிறது. மலைகள் நாம் பார்ப்பதற்கு உலகின் பல திசைகளில் – இடங்களில் காணப்பட்டாலும் அவற்றினிடையே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே உள்ளன. காப் மலையிலிருந்தே சொர்க்கத்திலிருந்து ஊற்றெடுக்கும் நதிகள், கடல்கள் ஆறுகள் அனைத்தும் ஏனைய மலைகளுக்கும் வழங்கப்படுகின்றன. மலைகள் பூமிக்கு முளைகள் போல் யதார்த்தத்தில் அவ்லியாக்களே இந்த பூமிக்கு முளைகளாக இருக்கின்றனர். மலைகளுக்கு காப் மலை தலைமை மலைபோல் வலீமார்களுக்கு குத்பு / கௌது என்பவரே அதிபராக இருக்கிறார்கள். அவர்களிலிருந்தே உலகில்வாழ் வலீமார்கள் அதிகாரம் பெறுகிறார்கள். காப் மலை கொண்டே ஏனைய மலைகள் தொடர்புடையதாக இருப்பது போல் குத்பைக் கொண்டே ஏனைய வலீமார்கள் நிலைபெற்றுள்ளனர். அத்தகு குத்புகளில் எவ்வுலகிலும் மாண்பொளிரும் குத்பே எங்கள் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழீ) அவர்களாகும். ஜனனம் குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் வலீமார்களின் பேரரசர் ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழீ) அவர்கள் அல் முக்ததா பிஅம்ரில்லாஹ் எனும் கலீபஹ்வின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரீ 470 புனித றமழான் தலைப்பிறையன்று (கி.பி. 1077 – 1078) ஜீலானீ எனும் நகரில் நீப் எனும் கிராமத்தில் உதயமானார்கள். பெற்றோர் அன்னவர்களின் தந்தை ஸெய்யிது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா (றஹ்) அவர்களாகும். அவர்களின் அன்னை உம்முல் கைர் என்றும் அமதுல் ஜப்பார் பாதிமா என்றும் அழைக்கப்படுகின்றார். தந்தை மாபெரும் ஸூபியாகவும் தாயார் இறைபக்தையாகவும் இருந்தார்கள். வம்சம் குத்பு நாயகத்தின் தந்தை அபூ ஸாலிஹ் இப்னு மூஸா என்பவர் இமாம் ஹஸன் (றழீ) அவர்களின் புதல்வர் ஸெய்யிது ஹஸன் முதன்னாவின் புதல்வரான ஸெய்யித் அப்துல்லாஹ் அல்ஹமஸ் அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் அன்னை இமாம் ஹூஸைன் (றழீ) அவர்களின் புத்திரர் இமாம் ஸைனுல் ஆபிதீன் (றழீ) அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். ஹழ்றத் குத்பு நாயகம் அவர்கள் தந்தை வழியில் ஹஸனீயாகவும், தாய் வழியில் ஹூஸைனீயாகவும் திகழ்கிறார்கள். இன்னார் நபீ ஸல் அவர்களின் காலத்திலிருந்து பதினோராவது தலைமுறையில் உதயம் பெற்றார்கள். அப்பாஸிய கலீபஹ்களின் மறைமுகமான சூழ்ச்சி காரணமாக இமாம் ஹஸன் (றழீ), ஹூஸைன் (றழீ) ஆகியோரின் குடும்பத்தினர் அரசியலைத் துறந்து உலகெங்கும் பரந்து மறைந்து வாழ்ந்தனர். குத்பு நாயகத்தின் தாய் தந்தையர் வழி மூதாதையர் காஸ்பியன் கடலையொட்டிய பாரசீக மொழி பேசப்பட்ட தபாரிஸ்தான் மாகாணத்தில் குடியேறினர். அதனாற்றான் முஹ்யித்தீன் ஆண்டகை பாரசீக நாட்டின் ஜீலானில் பிறந்தார்கள். கனவில் நபீகள் ஹழ்றத் குத்பு நாயகம் உலகில் மலர்வதற்கு முன்தினம் அவர்களின் தந்தையின் கனவில் தோன்றி ‘அபூ ஸாலிஹே, அல்லாஹ் உமக்கு ஒரு தவப்புதல்வரை அருளியுள்ளான். அவர் எனது சொந்தப் புதல்வரைப் போன்றவர். அல்லாஹ்வின் அருளுக்கும், எனது அன்புக்கும் உரித்தானவர். அவருக்கு இறைவன் இறை நேசர்களின் தலைமைப் பதவியை வழங்குவான்.” என்று சுபச் செய்தி சொன்னார்கள். பிறந்ததும் அற்புதம் தவச்சுடர்களான பெற்றோர் தமது தவச்சுடருக்கு ‘அப்துல்காதிர்’ என்று பெயர் சூட்டினர். றமழானில் அவர்கள் பிறந்ததால் அவர்கள் பகலில் பாலருந்தவில்லை. றமழான் முடியும் வரை இரவிலேயே பால் குடித்தார்கள். குழந்தையின் ஒரு வயதில் றமழான் மீண்டும் வந்த போது மேகமூட்டத்தால் முதல் பிறையைக் காண முடியவில்லை. மறுநாள் அவர்களின் தாயாரிடம் பிறை விடயமாக வினவப்பட்டபோது அன்று பகல் தன் அன்புச் சேய் அப்துல் காதிர் பாலருந்தவில்லை என்று தாயார் கூறினார்கள். அப்போதுதான் அன்று றமழான் முதல் நோன்பு என்பது தெரிய வந்தது. கிலாபத் பீடங்கள் குத்பு நாயகம் அவதரித்த இக்காலை மூன்று இஸ்லாமிய அரசுகள் பெருமை பெற்றுத் திகழ்ந்தன. 01. ஸ்பைனிலிருந்த உமையா கிலாபத் பீடம். 02. மிஸ்ர் நாட்டிலிருந்த பாத்திமத் கிலாபத் பீடம். 03. பக்தாதிலிருந்த அப்பாஸிய கிலாபத் பீடம். மூன்று இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் திகழ்ந்தாலும் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை மறந்ததனால் பலமிழந்து காணப்பட்டன. ஒவ்வொன்றும் தம்மிடையேயுள்ள ஆதிக்க வெறியால் ஒன்றை ஒன்று வீழ்த்தும் சதிமுயற்சிகளிலேயே ஈடுபட்டன. ஐரோப்பா இருண்டு கிடந்த அந்த கிறிஸ்துவ பதினோராம் நூற்றாண்டில் மூன்று கிலாபத் பீடங்களும் அமைந்த தலைநகரங்களிலும் அவற்றின் கிராமங்களிலும் பள்ளிவாயல்களும் கலை ஞானம் போதிக்கும் அறபுக் கலாபீடங்களும், நூலகங்களும் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக இக்கிலாபத் பீடங்கள் நிறைந்த நகரங்களில் சர்வகலாசாலைகளும் இயங்கிக் கொண்டிருந்தன. வெளியமைப்பு அழகாகவும், கவர்ச்சியாகவுமிருப்பினும் உள்ளே பதவி மோகம், உட்பூசல், அறிஞர்கள் அரசர்களுக்கு அடிமையாதல், சிற்றரசர்கள் கலீபாவுக்கு கட்டுப்பட்டு நடக்காமை, அவர்களை அடக்கும் தன்மை கலீபாக்களுக்கு இல்லாமை போன்றவை பரவலாகக் காணப்பட்டன. இக்கால கட்டத்தில் தான் குத்பு நாயகம் இந்த உலகில் ஜனனம் செய்தார்கள். ஆரம்பக் கல்வி மழலைப் பருவத்தில் தமது தந்தை காலமாகிவிட்டதால் அன்னையே அவர்களை பாதுகாத்து வளர்த்தார்கள். சிறுவயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்தார்கள். அப்போது அவர்களுக்குப் பத்து வயதிருக்கும். மத்றஸஹ்வில் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களது உஸ்தாத் மற்ற மாணவர்களை நோக்கி இதோ ‘வலீ’ வருகிறார். வழிவிடுங்கள் என்று குத்பு நாயகத்தை கண்ணியப்படுத்தினார்கள். நீங்கள் வலிய்யுல்லாஹ் என்பதை எப்போது முதலில் உணர்ந்தீர்கள். என்று அவர்களிடம் கேட்க்கப்பட்டபோது, எனது பத்தாவது வயதில் நான் பாடசாலைக்குச் செல்லும் போது எனது பின்னால் மலக்குகள் வந்து கொண்டிருப்பதையும், இறை நேசர் செல்கிறார், ஒழுக்கத்தைப் பேணுங்கள் என்று சொல்வதையும் நான் கேட்டேன் என்று நவின்றார்கள். பாடசாலைக் கல்வியில் தேர்ச்சி பெற்று பதினெட்டு வயதையடைந்தார்கள். இறை சிந்தனையும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. ஹிஜ்ரீ 488 துல்ஹஜ் மாதம் அறபாத் தினத்திற்கு முன்தினம் தமது ஊரில் வயல் வெளியில் நடந்து சென்றபோது மாடு ஒன்றைக் கண்டு அதைத் துரத்தலானார்கள். அது திரும்பி அப்துல் காதிரைப் பார்த்தது அப்பார்வை “நீ இதற்காகப் படைக்கப்பட்டவரல்ல” என்று சொல்வது போலிருந்தது. உடன் தனது வீட்டுக்குச் சென்று வீட்டு முகட்டின் மேல் ஏறிப் பார்த்த போது அவர்களுக்கு அறபாத் மைதானத்தில் மக்கள் நிறைவது காட்சியளித்தது. இது அவர்களது மனதுக்கு மகிழ்வைத் தந்ததுடன் இறை “மஹப்பத்’ பேராவலைத் தூண்டிவிட்டது. இறையன்பு ஏற்பட வேண்டுமாயின் உயர்கல்வியைத் தொடரவேண்டுமென்று தாயின் உத்தரவின்படி பக்தாத் நகர் வந்தார்கள். வரும் வழியில் எத்தனையோ அற்புதங்களும் படிப்பினைகளும் அவர்களுக்கு ஏற்பட்டன. அவர்களது உண்மை நிலையைக் கண்ட கள்வர் கூட்டமே திருட்டுத் தொழிலை விட்டு இறைபக்தர்களாக மாறிய வரலாறும் உண்டு. உயர்கல்வி பக்தாத் ஏகிய நாயகம் அவர்கள் சர்வ கலாசாலையில் நுழைந்து தகுதி வாய்ந்தவர்களிடம் உரிய கல்வியைக் கற்றுக் தேர்ந்தார்கள். அஷ்ஷெய்கு அபூஸயீதினில் முபாறக் பின் அலீ முகர்றமீ (றஹ்), அஷ்ஷெய்கு அபுல் உபா அலீபின் அகீல் (றஹ்) என்போரிடம் “பிக்ஹ்” மார்க்க சட்டக்கலையையும், அபூ காலிப் அஹ்மத், அபுல் காஸிம் அலீ ஆகிய நாதாக்களிடம் ஹதீஸ், தப்ஸீர் கலையையும், நிஜாமிய்யா கலாபீடத்தின் இலக்கியத் தலைமைப் பேராசிரியர் அல்லாமஹ் அபூஸகரிய்யாயஹ்யா தப்ரேஸி அவர்களிடம் அறபு இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்து நிகரில்லா கல்விமானார்கள். ஞானகுரு (ஷெய்கை)வைத் தேடுதல் நஹ்வு (மொழியிலக்கணம்) சர்பு (சொல்லிலக்கணம்) ஹதீஸ் (நபீமொழி) தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) பிக்ஹு (மார்க்க சட்டக்கலை) அல்லுகதுல் அறபிய்யஹ் (அறபுமொழி) அல்அதபுல் அறபிய்யி (அறபு இலக்கியம்) மற்றும் சர்வ கலையிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்த அவர்களை ஷெய்கு யூசுப் இப்னுஐயூம் அல்ஹமதானீ (றஹ்) போன்றோர் மக்களுக்கு உபதேசம் செய்து நேர்வழியில் அழைக்கும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் இதை குத்புநாயகம் ஏற்கவில்லை.
சத்தியம் நிச்சயம் வெல்லும். மனப்பேய் பிடித்த மடையர்களுடன் கூடி மார்கத்திற்கு மாறு செய்யாமல் மனதுடன் யுத்தம் செய்யும் மகான்களுடன் கூடி மார்க்கப்படி நடக்க உதவி செய் மாலிக்கி எவ்மித்தினே
Popular Posts
-
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்...
-
பெருநாள் தொழுகையை தொழுகும் முறை ஹனபி :- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தொழுகைக்கான நிய்யத்து சொல்லும் முறை :- ஈதுல் அள்ஹா உடைய பெருநாள் தொழுகை ...
-
¶"ஸுப்ஹான மவ்லிது ஓதுவது (ஷிர்க் பித்அத்) என்றால், உத்தம ஸஹாபாக்கள் ஓதிய (மவ்லித்) கவி வரிகளை மாத்திரம் ஓதுவதற்க்கு வஹ்ஹாபிகள் தயாரா?...
-
தினம் ஒரு துஆ கெட்ட கனவு கண்டால் أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் பொருள் : எடுத்தெற...
-
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்? சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சு...
-
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மா...
-
தினம் ஒரு துஆ கழிவறையில் நுழையும் போது اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ...
-
¶"இந்த அப்துல் பாஸித் புகாரி என்பவர் வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும...
-
இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள தியாகங்கள்" ❇ இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பிறப்...
No comments:
Post a Comment